வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (13:16 IST)

மறைந்த அரசியல்வாதிகள் சிலைகளை மறைக்க வேண்டாம்! – தேர்தல் ஆணையர் அறிவுறுத்தல்!

தமிழகம் முழுவதும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் மறைந்த அரசியல்வாதிகள் சிலைகளை மறைக்க வேண்டாம் என சத்யபிரதா சாகு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கட்சி சின்னங்கள், கட்சி தலைவர் சிலைகள் மறைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கட்சி சம்பந்தமான போஸ்டர்கள் ஒட்டுதல், சுவர் விளம்பரங்கள் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மறைந்த முன்னாள் அரசியல்தலைவர்கள் சிலைகளை மறைக்க அவசியமில்லை என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும்படைகள், 3 நிலை கண்காணிப்பு குழு, வீடியோ குழு, கணக்கெடுப்பு குழு செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.