வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 9 மார்ச் 2016 (15:57 IST)

ஸ்டிக்கருக்கே ’ஸ்டிக்கர்’ ஒட்டி தேர்தல் ஆணையம் அதிரடி

தமிழகத்தில் அரசு அலுவலங்கங்கள், பொது இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள முதலமைச்சரின் புகைப்படங்கள், அரசு விளம்பரங்கள் ஆகியவற்றை அகற்றும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
 

 
சென்ற ஆண்டு இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, உண்மையாகவே தொண்டு மனப்பாண்மையுடன் சேவை செய்தபோதுகூட, ஆளும் அதிமுகவை சேர்ந்தவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பினர்.
 
இதிலும் மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களிலும் அதிமுகவினர் ஸ்டிக்கர் ஒட்ட முற்பட, அப்போது அங்கிருந்த மத்திய ராணுவப் படையினர் துப்பாக்கியை தூக்கிக்காட்ட, அதிமுகவினர் நைசாக நழுவிய காட்சியெல்லாம் சமூக வலைத்தளங்களில் பரவியது.
 

 
அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பொருட்களிலும், ஜெயலலிதாவின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமண மணமக்களின் நெற்றியில் ஸ்டிக்கர் ஒட்டிய கொடுமையான சம்பவம் நடந்தேறியது.
 
இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மே 16ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்குகிறது. ஓட்டு எண்ணிக்கை மே 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
 
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது. இதையொட்டி தேர்தலுக்காக அமைக்கப்பட்டு இருந்த சோதனைச் சாவடிகள், கண்காணிப்புக்கான பறக்கும் படைகள் உடனடியாக செயல்படத் தொடங்கியுள்ளது.
 
சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் கொண்ட அரசு நோட்டீசு பலகைகள், அரசு திட்டங்களை விளம்பரப்படுத்தும் கட்–அவுட்கள் கோட்டை வளாகத்தில் இருந்த ஜெயலலிதா புகைப்படம் கொண்ட பேனர்கள் அதிரடியாக அப்புறப்படுத்தப்பட்டன.
 
அமைச்சர்களும் தற்போது அரசு கார்களை உபயோகப்படுத்தாமல் தங்களது சொந்த காரிலேயே சென்று வருகின்றனர். இதேபோல் எம்.எல்.ஏ.க்கள் அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி, தலைவர்கள், கவுன்சிலர்கள் அலுவலகங்களையும் காலி செய்து ‘சீல்’ வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.