வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2015 (13:42 IST)

”இளங்கோவனுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்” - ஜெயலலிதா

இளங்கோவனுக்கு எதிரான போராட்டத்தை இனி தொடர வேண்டாம் என தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

 
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சி மக்களால் கைவிடப்பட்ட நிலையிலும், காங்கிரஸ் கட்சியினைப் பற்றியும், தன்னைப் பற்றியும் ஊடகங்களில் தினந்தோறும் செய்திகள் வர வேண்டும் என்பதற்காக கடந்த சில மாதங்களாக பல்வேறு முறையற்ற கருத்துகளை வெளியிட்டு வரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், என்னை பிரதமர் நரேந்திர மோடி 7.8.2015 அன்று எனது இல்லத்தில் சந்தித்துப் பேசியதை கொச்சைப்படுத்தி, நாகரிகமற்ற, பண்பாடற்ற, கீழ்த்தரமான முறையில் அவதூறாக பேசியிருந்தார். 
 
14.8.2015 அன்று சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் தேவையின்றி மிகவும் ஆபாசமான ஒரு கருத்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் பேசியிருந்தார்கள். பரபரப்பு அரசியலுக்காக பேசட்டிருந்தாலும், வேண்டுமென்றே என்னைக் கொச்சைப்படுத்த வேண்டுமென்று பேசப்பட்டிருந்தாலும், அல்லது நிதானமிழந்து பேசப்பட்டிருந்தாலும், இந்தக் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
 
நாலாந்தர அரசியல்வாதிகளே பேச கூச்சப்படும் வார்த்தைகளை இளங்கோவன் பேசியுள்ளதைக் கண்டிக்கும் வகையிலும், இளங்கோவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியும், கழக உடன்பிறப்புகளும், பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும், மாணவ - மாணவியரும் அறப் போராட்டங்களை ஆங்காங்கே நடத்தி வருகின்றனர்.
 
இளங்கோவனின் அருவருக்கத்தக்க பேச்சினைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாமல், மனம் வெதும்பிய நிலையில், என் மீது அளவற்ற அன்பும், பாசமும், பரிவும் கொண்டுள்ள அதிமுகவின் அருமை உடன்பிறப்புகள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில், எதிர்ப்பினை பதிவு செய்யும் வகையில், இளங்கோவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அறப்போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
 
அதிமுக உடன்பிறப்புகளின் உணர்வுகளை தூண்டும் விதமாக இளங்கோவன் பேசி இருந்தாலும், மிகவும் நாகரீகமான முறையில் கழகத்தின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் அறப்போராட்டங்களை அதிமுகவினர் மேற்கொண்டுள்ளனர்.
 
அதிமுகவினர் நடத்தும் அறப்போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்த இளங்கோவன், "தன்னுடைய கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டன" என்று சப்பைக் கட்டு கட்டி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதிலிருந்தே இளங்கோவனின் நாகரிகமற்ற செயல் தவறானது என்பதை அவரே மறைமுகமாக ஒப்புக்கொண்டு இருக்கிறார் என்பது தெளிவாகியுள்ளது.
 
எனது அருமை கழக உடன்பிறப்புகள் தங்கள் இதயத்திலே ஏற்பட்ட வலியினை வெளிப்படுத்தும் விதமாக அறப்போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர் என்பதை நான் நன்கு அறிவேன். எனினும், கழக உடன்பிறப்புகள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி விட்ட நிலையில் இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை இனியும் தொடர வேண்டாம் என நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.