வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : வெள்ளி, 6 நவம்பர் 2015 (15:10 IST)

வைகோ தாயார் மறைவுக்கு கருணாநிதி, விஜயகாந்த், ராமதாஸ் இரங்கல்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் இன்று காலையில் காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


 


 
 
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
 
ம.தி.மு.க. பொதுச் செயலாளர், திரு. வைகோ அவர்களின் அன்புத் தாயார், திருமதி மாரியம்மாள், தனது 96 வயதில், இயற்கை எய்தினார் என்ற செய்தியினை அறிந்து பெரிதும் வருந்துகிறேன். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் கலிங்கப்பட்டி வைகோ இல்லத்திற்குச் சென்றிருந்த போது, என்னைத் தாயுள்ளத்தோடு வரவேற்று மகிழ்ந்தது எனக்கு இன்னமும் பசுமையாக நினைவில் இருக்கிறது. எனது அன்னையாரைப் போலவே வைகோவின் அன்னையாரும் அன்றாட அரசியலைப் புரிந்து கொண்டு வாழ்ந்தவர். குறிப்பாக வைகோவின் அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலும், ஆதரவாகவும், அரவணைப்பாகவும், ஆலோசனை வழங்குபவராகவும் விளங்கியவர் அன்னையார் மாரியம்மாள். அவரது மறைவினால் வாடும் வைகோ, மற்றும் அவருடைய குடும்பத்தினர், உறவினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


 
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
 
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை கேட்டு பேரதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன்.
 
கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் அவரது இல்லத்தில், அவரை நேரில் சந்தித்தபோது என்மீது காட்டிய பாசமும், பரிவும், விருந்தோம்பலும் என்னை நெகிழ வைத்தது. அவர் தனது தள்ளாத வயதிலும் டாஸ்மாக் மதுக்கடையை மூடவேண்டும் என்ற இலட்சியத்திற்காக நாள் முழுவதும் உண்ணாவிரதமிருந்து போராடியவர். காவல்துறையின் அடக்குமுறையை கண்டு சிறிதும் அஞ்சாதவர்.
 
அரசியல் போராட்ட களத்தில் பெண்களும் இறங்கி போராடவேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்த வீரத்தாய்க்கு எனது வீரவணக்கம். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 
 
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
 
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் உடல் நலக்குறைவால் பாளையங்கோட்டை தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.
 
தாயார் மாரியம்மாளின் மறைவு நண்பர் வைகோவுக்கும், அவரது குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். தாயாரை இழந்து வாரும் வைகோவுக்கும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மதிமுகவினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.