1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: வெள்ளி, 19 செப்டம்பர் 2025 (12:16 IST)

விவசாயிகளுக்கு உரம் கிடைக்கவிடாமல் செய்யும் திமுக பிரபலம்?? - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

annamalai Mk stalin

தென்மாவட்ட விவசாயிகளுக்கு யூரியா மூட்டைகள் செல்லவிடாமல் திமுக பிரபலம் ஒருவர் கமிஷன் லாபி செய்வதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை “தமிழகத்தின் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்காக, 1,350 டன் யூரியா, குஜராத்திலிருந்து சரக்கு ரயிலில் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த யூரியா, மதுரை கூடல்புதூர் பகுதியில் உள்ள குட்ஷெட்டிற்கு வந்தடைந்த நிலையில், திமுக வட்டச் செயலாளராக உள்ள செந்தில் என்பவர், லோடுமேன்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் தடுத்து வைத்திருக்கிறார். 

 

மாலை 6 மணிக்கு முன்பாக லோடு ஏற்றினால், ரூபாய் 100 கூலியும், 6 மணிக்கு மேல் லோடு ஏற்றினால், ரூபாய் 300 கூலியும் வழங்கப்பட வேண்டும். லோடுமேன் கூலியில் அதிகம் கமிஷன் வாங்குவதற்காக, இந்த திமுக வட்டச் செயலாளர் செந்தில், மாலை 4 மணிக்கே வந்த யூரியா மூட்டைகளை ஏற்ற விடாமல், லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் என அனைவரையும் அலைக்கழிக்கும் வகையில் ரவுடிகளை வைத்து, லோடுமேன்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இதனால், தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய 1350 டன் யூரியா மூட்டைகள் மதுரை குட்ஷெட்டில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு, நாள்தோறும் 2 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. 

 

ஒருபுறம், தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு என்று, மத்திய அரசுக்கு, முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த 16.09.2025 அன்று கடிதம் எழுதி நாடகமாடியிருக்கிறார். மற்றொரு புறம், மதுரையை வந்தடைந்த யூரியா மூட்டைகளை, தென்மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல விடாமல், அவரது கட்சிக்காரர் தடங்கல் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இதனால் பாதிக்கப்படுவது, தென்மாவட்ட விவசாயிகளே.

 

உடனடியாக, யூரியா மூட்டைகளை தென்மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்குத் தொடர்ந்து இடைஞ்சலாக நடந்து கொள்ளும் தனது கட்சியினரை, முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் எச்சரித்துக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K