3 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் தேக்கம்.. ஸ்டாலின் படம் இருப்பதால் சிக்கல்..
தொழிலாளர் நல வாரியத்தின் சார்பில் தொழிலாளர்களுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக அச்சடிக்கப்பட்ட சுமார் மூன்று லட்சம் ஸ்மார்ட் கார்டுகள், தயாராகி மூன்று மாதங்கள் ஆகியும் விநியோகம் செய்யப்படாமல் முடங்கி கிடப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஸ்மார்ட் கார்டுகளில் பயனாளிகளின் புகைப்படம், முகவரி, பிறந்த தேதி, செல்போன் எண் மற்றும் பதிவு எண் ஆகிய அனைத்து விவரங்களும் தெளிவாக அச்சடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த கார்டுகளில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் இடம் பெற்றிருப்பதே இந்த தாமதத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, பழைய முதலமைச்சரின் படம் இருக்கும் கார்டுகளை விநியோகிப்பதில் அதிகாரிகள் மத்தியில் தயக்கம் நிலவுவதால் இந்த விநியோக பணி முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, நலவாரியத்தின் மூலம் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு நலத்திட்ட உதவிகளை உடனடியாக பெற முடியாமல் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அரசு பணமும் மக்கள் வரியும் விரையமாவதைத் தவிர்க்க, ஏற்கனவே தயாராக உள்ள இந்த கார்டுகளை உடனடியாக விநியோகிக்க வேண்டும் அல்லது உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் தடங்கலின்றி சென்றடைய ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே பயனாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Edited by Siva
