வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 20 ஜனவரி 2016 (05:43 IST)

தலித் மாணவர் தற்கொலை: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கருணாநிதி வலியுறுத்தல்

ஐதராபாத் பல்கலைக் கழகத்தில் தலித் மாணவர் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
 

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
ஆந்திரா, குண்டூரைச் சேர்ந்த தலித் மாணவர்  ரோகித்  வெமுலா.   இவர் ஐதராபாத் பல்கலைக் கழகத்தில், அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சமூகக் கல்வி  பிரிவில், ஆராய்ச்சி (பி.எச்.டி.) படிப்பைப் படித்து வந்தார்.   பல்கலைக் கழகத்தில் இயங்கி வந்த  அம்பேத்கர்  மாணவர் கூட்டமைப்பில்  ரோகித் வெமுலா  உறுப்பினராகச் செயல்பட்டு வந்தார்.
 
அந்தப் பல்கலைக் கழகத்தில் "முஷாபர்நகர் பகி ஹை" என்ற  ஆவணப் படம் ஒன்றைத் திரையிடுவது குறித்து,  அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்புக்கும்,  அகில பாரதிய  வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) அமைப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்  பல்கலைக் கழக வளாகத்திற்குள்ளே தகராறு ஏற்பட்டுள்ளது.
 
இதைத் தொடர்ந்து ரோகித் வெமுலா உட்பட ஐந்து பேரை,  பல்கலைக் கழக நிர்வாகம் "சஸ்பென்ட்" செய்தது.    பல்கலைக் கழக விடுதியிலிருந்தும் இந்த ஐந்து மாணவர்களும் நீக்கப்பட்டுள்ளார்கள்.
 
அதனால், அந்த ஐந்து மாணவர்களும், பல்கலைக் கழக வளாகத்திற்குள்ளே  திறந்த வெளியில்   படுத்து வந்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவர்கள், தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைப்பதற்காக பல்கலைக் கழகத் துணை வேந்தர், அப்பாராவைச் சந்திக்க  பல முறை முயன்றதாகவும், அதற்கு அனுமதி தரவில்லை என்றும் கூறப்படுக்றது.
 
இந்த மாணவர்களுக்கு எதிராகவும், பல்கலைக் கழக வளாகத்தில் நடை பெறும்  சாதி அரசியல் தொடர்பாகவும், மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா,  மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானிக்கு  கடந்த ஆண்டு இறுதியில்  கடிதம் எழுதியிருக்கிறார்.
 
1993ஆம்  ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி, யாகூப் மேமன் துhக்கிலிடப்பட்டதை எதிர்த்து  சில மாணவர்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தியிருக்கின்றன. அதற்கு எதிராக ஏ.பி.வி.பி., அமைப்பு செயல்பட்டிருக்கிறது.
 
எனவே, ஏ.பி.வி.பி.க்கு ஆதரவாகவும், தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடும் தலித் மாணவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும்படி தத்தாத்ரேயா, ஸ்மிருதி இரானிக்கு அந்தக் கடிதத்தில் எழுதியதாகக் கூறப்படுகிறது.   அதைத் தொடர்ந்து தான் ரோஹித் வெமுலா உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் பல்கலைக் கழகத்திலிருந்தும் விடுதியிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
 
அதைத் தொடர்ந்து தான் 17-1-2016 அன்று ரோஹித் வெமுலா என்ற தலித் மாணவர், தன்னுடைய  நண்பரின் விடுதி அறையில் துhக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.  அதை  அறிந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
ரோஹித் வெமுலாவின்  தற்கொலைக்கு அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, பல்கலைக் கழகத் துணை வேந்தர் அப்பாராவ் ஆகியோர் காரணம் என்று மாணவர்கள் கூறுகிறார்கள்.   மாணவர்களின் புகார் அடிப்படையில்,  தற்கொலைக்குத் தூண்டுதல், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்  கீழ் பண்டாரு தத்தாத்ரேயா, துணை வேந்தர் அப்பாராவ்,  மேலவை உறுப்பினர் ராமச்சந்திர ராவ், மாணவர்கள் சுஷில் குமார், ராமகிருஷ்ணா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஸ்மிருதி இரானியின் அலுவலகம் முன்பும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தலித் மாணவரின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நியாயமான, சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும் என தெரிவித்துள்ளார்.