1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Conspiracy To Overthrow TVK Government: 13 Lakh Cash Seized in Raid At Senthil Balaji Aide's House

தவெக அரசை கவிழ்க்க முயற்சித்த திருச்சி நரேஷ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.. பரபரப்பு தகவல்...

money
தமிழக வெற்றிக் கழக அரசை கவிழ்க்க சதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான திருச்சி நரேஷ் என்பவரது வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
தவெக ஆட்சியை முடக்க குதிரை பேர சதியில் ஈடுபட்டதாக திருச்சியை சேர்ந்த நரேஷ் ஏற்கனவே போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திருச்சியில் உள்ள அவரது வீட்டில் தீவிரமான அதிரடி சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, நரேஷின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூபாய் 13 லட்சம் ரொக்க பணம் மற்றும் பல முக்கிய ரகசிய ஆவணங்களை போலீசார் தற்பொழுது கைப்பற்றியுள்ளனர்.
 
கைது செய்யப்பட்டுள்ள நரேஷ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்பது விசாரணையில் ஏற்கனவே அம்பலமானது. அசோக் குமார் கொடுத்த உத்தரவின் படியே, தவெக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கத் தான் செயல்பட்டதாக நரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த ஆவணங்கள் மற்றும் பண பறிமுதல் மூலமாக செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாருக்கு எதிரான வழக்கு மேலும் வலுவடைந்துள்ள நிலையில், தலைமறைவாக இருக்கும் இருவரையும் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
 
Edited by Siva