வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 10 செப்டம்பர் 2015 (15:09 IST)

உறுதியானது இரண்டு வருட பி.எட். படிப்பு - அதிகாரப் பூர்வ அறிவிப்பு

நடப்பாண்டு முதல் பி.எட். படிப்பு உறுதியானது இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளதை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
 
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ) புதிய வழிகாட்டுதலின் படி பி.எட், எம்.எட் படிப்பு காலம் இந்த கல்வி ஆண்டு (2015-–16) முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.
 
இதை பிற மாநிலங்கள் அனைத்தும் ஏற்று நடைமுறைப்படுத்திய நிலையில் தமிழகம் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழகத்தில் உள்ள சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்கம் இந்த புதிய வழிகாட்டுதலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
 
இதனால் தமிழகத்தில் இந்த ஆண்டு பி.எட். படிப்பு காலம் ஓராண்டா, இரண்டு ஆண்டுகளாக என்ற குழப்பம் நீடித்து வந்தது. மேலும் மாணவர் சேர்க்கையும் தாமதமாகி வந்தது. இந்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை சென்னை காமராஜர் சாலையில் உள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்டது.
 
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போதும் மாணவர் சேர்க்கைக்கான ஆயத்த பணிகளை அவை மேற்கொண்டது. இந்த நிலையில் பி.எட், எம்.எட் படிப்பு காலம் இந்த ஆண்டில் தமிழகத்திலும் இரண்டு ஆண்டுகள்தான் என்பதை தமிழக அரசு உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இது குறித்து விலிங்டன் சீமாட்டி கல்வியியில் மேம்பாட்டு நிறுவன முதல்வரும் பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளருமான ஆர்.பாரதி கூறுகையில், “என்.சி.டி.இ. வழிகாட்டுதலின்படி தமிழகத்திலும் இந்த ஆண்டு முதல் பி.எட். படிப்பு காலத்தை இரண்டு ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து உத்தரவிட்டுள்ளது.
 
எனவே நடப்பு ஆண்டில் பி.எட், எம்.எட் படிப்புகளில் சேரும் மாணவர்கள் 2 ஆண்டுகள் படித்தாக வேண்டும்.மேலும் பி.எட், படிப்புக்கான கலந்தாய்வு வரும் 28ஆம் தேதி தொடங்கப்படும். இது தொடர்பான அறிவிப்பு கல்லூரி இணைய தளத்தில் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.