தாலி கட்டிய அடுத்த நிமிடம் மணக்கோலத்துடன் ஓட்டு போட்ட புதுமண தம்பதி.. வைரல் புகைப்படம்..!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், தனது திருமண நாளன்று மணக்கோலத்திலேயே வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றிய மணப்பெண்ணின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இன்று காலை, பா.ஜ.க முன்னாள் ராணுவ வீரர் பிரிவு மாநிலத் துணைத்தலைவர் கேப்டன் பாலசுப்பிரமணியத்தின் மகள் அக்ஷயாவுக்கும் மணிகண்டனுக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு, அக்ஷயா தனது கணவருடன் மணக்கோலத்திலேயே அண்ணாமலை பல்கலைக்கழக கோகலை ஹாலில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். அங்கு வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார். வாழ்வின் மிக முக்கியமான நாளன்று, ஒரு குடிமகளாக தேசத்தின் முக்கிய கடமையான வாக்களிப்பதை மறக்காமல் செய்த அக்ஷயாவின் செயலை அங்கு வந்திருந்த மற்ற வாக்காளர்களும் அதிகாரிகளும் வெகுவாகப் பாராட்டினர்.
"திருமணம் எவ்வளவு முக்கியமோ, அதைவிட நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஜனநாயக கடமை மிக முக்கியம்" என்ற செய்தியை இந்த நிகழ்வு உரக்கச் சொல்லியுள்ளது. விடுமுறை நாளாகக் கருதி வீட்டில் இருப்பவர்கள் மத்தியில், இதுபோன்ற விழிப்புணர்வுச் செயல்கள் 100 சதவீத வாக்குப்பதிவிற்கு உத்வேகம் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Edited by Siva
