கரூர் சிபிஐ விசாரணை!.. விஜயின் பிரச்சார வாகனத்தை ஓட்டி பார்த்து ஆய்வு..
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்காக கரூருக்கு சென்றபோது அவரைக் காண பல இடங்களில் இருந்தும் பல ஆயிரம் மக்கள் கூடியதால் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தவெகவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அந்த சம்பவம் நடந்த போது தவெக நிர்வாகிகள் கரூரிலிருந்து வெளியேறிவிட்டதாக சொல்லப்பட்டது. மேலும் விஜயும் கூட்டத்திலிருந்து கிளம்பி சென்னை வந்துவிட்டார்.
இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த சில மாதங்களாகவே சிபிஐ அதிகாரிகள் கரூருக்கு நேரில் சென்று பல தகவல்களையும் சேகரித்தினர். மேலும் தவெக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் அதிகாரி என பலருக்கும் சம்மன் அனுப்பி டெல்லிக்கு வரவழைத்து அவர்களிடம் வாக்கு மூலம் பெற்றார்கள். அதோடு வருகிற 12-ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என தவெக தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே, அவர் நாளை இரவு டெல்லி செல்லவிருக்கிறார்.
இந்நிலையில், இன்று காலை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் விஜயின் பிரச்சார வாகனத்தை ஆய்வு செய்தனர். அதன் நீளம், அகலம் ஆகியவற்றை குறித்துக் கொண்டனர். மேலும், கரூருக்கு விஜய் வந்த போது அந்த வாகனத்தை ஓட்டிய டிரைவரை வரவழைத்து வாகனம் கரூருக்கு வந்த போது எவ்வளவு வேகத்தில் ஒட்டினார்? கூட்டத்தில் வரும்போது எவ்வளவு வேகத்தில் வண்டி ஓட்டினார்? அதை அப்படியே ஓட்டி காட்டுங்கள் என சொல்லி அதையும் குறித்துக்கொண்டார்கள்.
மேலும், சம்பவம் நடந்த போது அங்கு என்ன நடந்தது?., விஜயின் வாகனம் எப்போது அங்கிருந்து கிளம்பியது என பல தகவல்களையும் சிபிஐ அதிகாரிகள் தெரிந்துகொண்டனர்.