வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 30 ஏப்ரல் 2015 (10:30 IST)

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்: உமா பாரதி தகவல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என்று மத்திய நீர்வளம் மற்றும் நதிகள் மேம்பாட்டு துறை அமைச்சர்  உமா பாரதி கூறியுள்ளார்.
 
பாமாக எம்.பி அன்புமணி ராமதாஸ் நேற்று மாலை மத்திய நீர்வளம் மற்றும் நதிகள் மேம்பாட்டு துறை அமைச்சர் உமா பாரதியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
 
அப்போது, காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து உமா பாரதியிடம் அவர் மனு ஒன்றை கொடுத்தார்.
 
பின்னர், கர்நாடகம் அணை கட்டினால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வறட்சி ஏற்படும் என்று கூறிய அவர், இதுபோன்ற பிரச்சினைகளுக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைப்பதுதான் தீர்வாக இருக்கும் என்றும் விளக்கிக் கூறினார். இந்த சந்திப்புக்கு பின்னர் உமா பாரதி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
 
அப்போது உமா பாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது குறித்த சட்ட ஆலோசனைகளை மத்திய அரசு மேற்கொண்டு இருப்பதாகவும், அதில் தெளிவான நிலை ஏற்பட்டதும் அந்த வாரியத்தை அமைப்பது பற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்கும் என்றும் தெரிவித்தார்.
 
மேலும், நதிகள் இணைப்பு திட்டத்தை பொறுத்தமட்டில், மாநிலங்களிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும், அதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதும் அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்றும் உமாபாரதி தெரிவித்தார்.