1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 14 பிப்ரவரி 2015 (15:16 IST)

2 மாணவர்கள் மரணத்திற்கு ஓரினச் சேர்க்கை காரணமா?

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் இறந்ததற்கு ஓரினச் சேர்க்கை காரணமாக இருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் சந்தேகமடைந்துள்ளனர்.
 
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வெள்ளக்கால் கிராமத்தை சேர்ந்த குமார் மகன் மாரிச்செல்வம் (16), மற்றும் அவரது நண்பர் முருகன் (17)  இருவரும் கடந்த 5ஆம் தேதி கீழப்பாவூர் பகுதியில் பிணமாக கிடந்தனர்.
 
இது தொடர்பாக பாவூர்சத்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மாணவர்களுக்கு பாவூர்சத்திரம் குறும்பலாபேரியை சேர்ந்த அழகர் என்ற சுடலைசாமி (36) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
 
ஆனால் அவர் கடந்த 4ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் இறந்தது குறித்து அவரது குடும்பத்தினர் வருவாய்த்துறைக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்காமல் உடலை எரித்து விட்டனர். இது தொடர்பாக உறவினர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 
கீழப்பாவூரில் பெட்டிக்கடை வைத்திருந்த அழகருக்கு திருமணம் ஆகி ஓரிரு நாளிலேயே அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். மேலும், அங்கு செல்போன் ரீசார்ஜ் செய்ய வரும் பள்ளி மாணவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
 
மாணவர்கள் இறந்து கிடந்த இடத்தில் கிடைத்த தடயங்களை வைத்து பார்க்கும் போதும், அழகர் வீட்டில் ரத்தக்கறை கிடந்த துணிகளை பார்க்கும் போதும் அழகருக்கும் தொடர்பு இருந்திருக்க வாய்ப்பிருப்பதாக காவல் துறையினர் கருதுகின்றனர்.
 
மேலும், அழகருக்கும், கொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கும் இடையே ஓரின சேர்க்கை தொடர்பாக தகராறு ஏற்பட்டிருக்கலாம் என்றும், அந்த தகராறில் மாரிச்செல்வத்தையும், முருகனையும் கொலை செய்தது அழகர் தான் என்றும் தெரிய வந்துள்ளது.