எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: விரைந்த காவல்துறை.. பரபரப்பு தகவல்..!
சென்னை, அடையாறு, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லம் மற்றும் கடலோர காவல் படை அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் காவல் துறையினர் விரைந்து வந்து சோதனை செய்தனர். இறுதியில், இது வெறும் புரளி எனத் தெரிய வந்தது.
எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதேபோல், நேப்பியர் பாலம் மற்றும் புது வண்ணாரப்பேட்டையில் உள்ள கடலோரக் காவல் படை கிழக்கு மண்டல அலுவலகங்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
தகவல் கிடைத்ததும், காவல் துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனைகளில் ஈடுபட்டனர். மூன்று இடங்களிலும் தீவிர சோதனை நடத்தியதில், எந்தவித வெடிபொருளும் கண்டறியப்படவில்லை. இந்த மிரட்டல்கள் வெறும் புரளி என உறுதி செய்யப்பட்டது.
இந்த மூன்று மிரட்டல்களையும் ஒரே நபர் விடுத்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. இது தொடர்பாக கோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர். விரைவில் அந்த நபர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran