1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 9 மார்ச் 2016 (14:26 IST)

விஜயகாந்தே பாஜக கூட்டணியின் முதல் அமைச்சர் வேட்பாளர் :சரண்டரான பாஜக

தேமுதிகவோடு பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், விஜயகாந்தை தேசிய முற்போக்கு கூட்டணியின் முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க விரும்புவதாகவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.


 

 
தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திக்க, அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வரும் வேளையில், விஜயகாந்தை தங்கள் பக்கம் இழுக்க ஒரு பக்கம் திமுகவும், மறுபக்கம் பாஜகவும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. 
 
இந்நிலையில், திமுகவுடன் தேமுதிக ஏறக்குறைய இணைந்து விட்டதாகவும், 55-59 சீட் வரை தேமுதிகவிற்கு ஒதுக்க திமுக தரப்பு ஒத்துக் கொண்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில், தேமுதிகவுடன் கூட்டணி குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி “ பழம் நழுவி பாலில் விழும் சூழ்நிலையில் இருக்கிறது” என்று கருத்து தெரிவித்தார்.
 
மறுபக்கம், பாஜக விஜயகாந்தோடு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறிவருகிறது. இதனால் தமிழக அரசியிலில் ஒரு குழப்பம் நீடித்து வந்தது.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜவடேகர் “தேமுதிகவுடனான கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்து விட்டதாக வெளியான செய்தி பொய்யான ஒன்று. தேமுதிகவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. நேற்று விஜயகாந்த் பிரேமலாதாவுடன் தொலைபேசியில் கூட்டணி குறித்து பேசப்பட்டது.
 
எங்கள் கூட்டணியில் தேமுதிக இணையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. விஜயகாந்தை பாஜக கூட்டணியின் முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.