வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 21 நவம்பர் 2015 (09:34 IST)

கூலிப்படையை அனுப்பி கணவனை கொலை செய்த மனைவி: தாய் தந்தையருடன் கைது

பேசின் பாலம் அருகே கார் ஓட்டுனர் கொல்லப்பட்ட வழக்கில், அவருடைய மனைவி, மாமனார், மாமியார் மற்றும் கூலிப்படையினர் உட்பட 6 பேரை காவல்துறையிர் கைது செய்தனர்.


 

 
சென்னை புளியந்தோப்பு தட்டாங் குளத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். 36 வயதுடைய அவர் கார் ஓட்டுனராகப் பணியாற்றி வந்தார்.
 
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர், பேசின் பாலம் அருகே உள்ள மோதிலால் தெருவில் உள்ள கடையில் மது அருந்திவிட்டு சென்றார்.
 
அப்போது 4 பேர் கொண்ட கும்பல், சீனிவாசனை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
 
இதனால், பலத்த காயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கொலை சம்பவம் குறித்து பேசின் பாலம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 
 
அந்த விசாரணையில், கொலை செய்யப்பட்ட சீனிவாசனின் மனைவி நாகஜோதி, மாமனார் நாகேஷ்வரன், மாமியார் மல்லேஸ்வரி ஆகியோர் முன்னுக்குபின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர்.
 
இதைத் தொடர்ந்து, அவர்கள் மீது சந்தேகமடைந்த காவல்துறையிர், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
 
அப்போது, சீனிவாசன் தினமும் குடித்துவிட்டு மனைவியை கொடுமை செய்ததாகவும், மனமுடைந்த நாகஜோதி இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

மகளின் துன்பத்தை எண்ணிய நாகஜோதியின் பெற்றோர் அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி அப்பு என்பவருடன் பேசி சீனிவாசனை கொலை செய்ய முடிவு எடுத்ததும் தெரியவந்தது.
 
அவர்கள் சீனிவாசனை கொலை செய்வதற்காக 50 ஆயிரம் ரூபாய் பேரம் பேசி, முன்பணமாக 20 ஆயிரம் ரூபாய் பெற்று கொண்டுள்ளார்.


இதைத் தொடர்ந்து, அப்பு தனது கூட்டாளிகளான மதன், கருப்பு என்கிற ரகு ஆகியோருடன் சேர்ந்து சீனிவாசனை கொலை செய்துள்ளனர் என்பது விசாரணையில் உறுதிபடுத்தப்பட்டது.
 
இந்நிலையில், சீனிவாசனின் மனைவி நாகஜோதி, மாமனார் நாகேஷ்வரன், மாமியார் மல்லேஸ்வரி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
மேலும், பேசின்பாலம் சுடுகாடு பகுதியில் பதுங்கியிருந்த ரவுடிகளான அப்பு, மதன், ரகு ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
 
பின்னர், எழும்பூர் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.