வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 1 மார்ச் 2016 (14:41 IST)

ரயில் முன் பாய்ந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை: வாழப்பாடியில் சோகம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே திருட்டு பட்டம் சுமத்தியதால் மனம் உடைந்த ஆட்டோ ஓட்டுநர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை கொண்டார்.


 

 
இது குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது:–
 
சேலம் மாவட்டம் வாழப்பாடி கிழக்குகாடு பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. விவசாயியான இவரது தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகளை மர்ம நபர் ஒருவர் பிடித்து செல்வதைக் கண்டு இவர் அதிர்ச்சி அடைந்தார்.
 
உடனே அவர் திருடன், திருடன் என்று கூச்சல் போடவே அங்கு வந்த விவசாயிகள் மாட்டை திருடிச்சென்ற வாலிபரை மடக்கி பிடித்து அடி கொடுத்தனர்.
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே நடந்தது. இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 
 
அங்கு பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த வாலிபர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரித்ததில் அவர் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள உமையாள்புரம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பதும், மாடுகளை திருடிச்செல்ல முயன்றதும் தெரியவந்தது.
 
இந்நிலையில், மாடு திருடியதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்று சுதாகரை விசாரித்த போது, வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த சரக்கு ஆட்டோ உரிமையாளரும், டிரைவருமான சிவக்குமார் என்பவர் தான் ஆட்டோவில் தன்னை இங்கே இறக்கி விட்டு மாடுகளை திருடி வரச்சொன்னதாக சிவக்குமார் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
 
அப்போது, சம்பவ இடத்திற்கு ஆட்டோவுடன் வந்த சிவக்குமாரும், சுதாகரும் இது குறித்து திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
 
அப்போது அங்கிருந்த காவல்துறையினரும், பொதுமக்களும் அவர்களை சமாதானப் படுத்திக்கொண்டிருந்தனர்.
 
அப்போது, விருத்தாசலத்தில் இருந்து சேலத்தை நோக்கி பயணிகள் ரயில் வந்துகொண்டிருந்தது.
 
அப்போது, தனக்கு திருட்டு பட்டம் சுமத்தியதால் மனமுடைந்த ஆட்டோ ஓட்டுநர் சிவக்குமார் அருகில் இருந்த தண்டவாளம் பகுதிக்கு ஓடிச்சென்று ஓடும் ரயில் முன் பாய்ந்தார்.
 
இதனால், சிவக்குமார் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்கொலை செய்து கொண்ட சிவக்குமாருக்கு கண்ணமணி என்ற மனைவியும், சரண்யா என்ற 13 வயது மகளும், தனுஷ்குமார் என்ற 11 வயதுடைய மகனும் உள்ளனர்.
 
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்ந தற்கொலை சம்பவத்தால் வாழப்பாடி பகுதி பொதுமக்களிடம் சோகம் குடிகொண்டுள்ளது.