வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 12 மார்ச் 2015 (19:53 IST)

கோவை மாநகராட்சியில் கவுன்சிலர்களிடையே திமுக - அதிமுக பயங்கர மோதல்; அடிதடி!

கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் திமுக - அதிமுக கவுன்சிலர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் திமுக பெண் கவுன்சிலர் மீனா லோகநாதன் மீது அதிமுக கவுன்சிலர்கள் மன்ற கூட்டத்தில் வைத்து தாக்குதல் நடத்தினர்.
 
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த திமுக கவுன்சிலர் மீனா லோகநாதன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கோவை மாநகராட்சியின் 2015 - 2016 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட், மாமன்ற கூட்டத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் கலந்து கொள்ள வந்த திமுக பெண் கவுன்சிலர் மீனா லோகநாதன், கடந்த 2012 முதல் மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பதை விளக்கும் விதமாக நெற்றியில் நாமம் போட்டபடி பட்ஜெட்டில் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
 
இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே திமுக - அதிமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அதிமுக கவுன்சிலர்கள் திமுக கவுன்சிலர் மீனா லோகநாதனை சூழ்ந்து கொண்டு அவர் மீது தண்ணீரை ஊற்றினர். வாக்குவாதம் முற்றிய நிலையில் 22வது வார்டு அதிமுக கவுன்சிலர் அன்னம்மாள் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் மன்ற அரங்கிலேயே மேயர் ராஜ்குமார் முன்னிலையில் கடுமையாக தாக்குதல் நடத்தினர்.
 
இந்த தாக்குதலில் மீனா லோகநாதன்  காயமடைந்தார். இந்நிலையில் அதிமுக கவுன்சிலர்களின் பிடியில் இருந்து மீனா லோகுவை மீட்ட திமுக கவுன்சிலர்கள், அதிமுக கவுன்சிலர்களின் நடவடிக்கையை கண்டித்து மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
 
அப்போது பேட்டியளித்த திமுக கவுன்சிலர்கள், திமுக குறித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளியிட்ட கருத்துக்கு பதில் தெரிவிக்கவே அதிமுக கவுன்சிலர்கள் ஆத்திரமடைந்து கூர்மையான பொருட்களால் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தனர். தாக்குதலில் காயமடைந்த மீனா லோகநாதன் மயக்கமடையவே உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் மன்ற கூட்டத்தில் மீனா லோகநாதன் தாக்கபட்டதை கண்டித்தும் ,பட்ஜெட் மீதான விவாதம் நடத்த போதிய கால அவகாசம் கொடுக்க வலியுறுத்தியும் பாஜக, தேமுதிக, சிபிஎம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.