1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : சனி, 23 ஜனவரி 2016 (15:55 IST)

குறிப்பை வைத்துக் கொண்டு பேசுவது ஏன்? - ஜெயலலிதா விளக்கம்

குறிப்பில்லாமல் பேச முடியாதா என்ற கேள்வியை எழுப்பி அதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் இன்று விளக்கம் கொடுத்தார்.


 

 
சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று நடந்த விவாதத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார்.
 
அப்போது இது குறித்து ஜெயலலிதாக கூறியதாவது:-
 
முந்தைய திமுக ஆட்சியில் நஷ்டத்தில் இருந்த கோ–ஆப்டெக்ஸ் போன்ற அரசு நிறுவனங்கள் சீரமைக்கப்பட்டு லாபத்தில் இயங்கி வருகின்றன.
 
முந்தைய மைனாரிட்டி திமுக அரசு மக்கள் நலனில் எவ்வித அக்கறையும் கொள்ளாமல், தங்கள் சொந்த நலனை கருத்தில் கொண்டே செயல்பட்டனர்.
 
இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இலவச வண்ண தொலைக்காட்சி திட்டம். ஆனால் எனது தலைமையிலான அதிமுக அரசைப் பொறுத்த வரை எங்களது திட்டங்கள் அனைத்தும், தமிழக மக்கள் நலனுக்காகத்தான்.
 
தமிழர் வாழ்வும், தமிழர் வளமும் என்றென்றும் மங்காது புதுப் பொலிவுடன் திகழும் வண்ணம் நாங்கள் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
 
கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக மக்கள் ஒரு மாற்றம் வேண்டுமென உறுதியுடன் இருந்தார்கள். சட்டம் ஒழுங்கு சீர் செய்யப்பட வேண்டும்; இல்லாதோரின் நிலைஉயர வேண்டும்; இருண்ட தமிழகம் ஒளிபெற வேண்டும்; விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், ஒடுக்கப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர், ஏழை, எளியோர் ஆகிய அனைவர் வாழ்விலும் வசந்தம் வீசிட வேண்டும் என்று, இந்த மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.
 
அவ்வாறு மாற்றம் ஏற்படுத்திய மக்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். தமிழக மக்களின் வாழ்வை ஏற்றம் பெறச் செய்துள்ளோம். இதைத் தான் எனது பதிலுரையில் நான் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளேன்.
 
எனவேதான் "தொடரட்டும் இந்த அரசு" என்று மக்கள் தற்போது நினைக்கிறார்கள். மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்பதை அடிக்கடி சொல்லி வருகிறேன். அதைப் போலவே மக்களால் எனது தலைமையிலான அரசு, மக்களுக்காகவே எனது தலைமையிலான அரசு என்பதையும், சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மக்களால் இந்த அரசு மக்களுக்காகவே இந்த அரசு.
 
சிலர் கேட்கலாம் குறிப்பில்லாமல் பேச முடியாதா? என்று. பேச முடியும், மணிக்கணக்கில் பேச முடியும். பொதுக் கூட்டங்களில் பேசுவதுபோல் முழங்க முடியும். செந்தமிழில் முழங்க முடியும். ஆனால், இத்தனை புள்ளிவிவரங்களை நினைவில் வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா?
 
ஒவ்வொரு துறையை எடுத்துக் கொண்டாலும் 36 துறைகள் இருக்கின்றன அராசங்கத்தில் ஒவ்வொரு துறையை எடுத்துக் கொண்டாலும் நாங்கள் செய்திருக்கின்ற சாதனைகளைச் சொல்ல வேண்டுமானால் ஒரு துறைக்கு ஒரு நாள் தேவை.
 
ஒரு நாள் முழுவதும் தேவை. அப்படியானால், இந்த ஐந்து ஆண்டு காலத்தில் நாங்கள் செய்துள்ள சாதனைகள் முழுவதையும் சொல்லி முடிக்க வேண்டுமென்றால் 36 நாட்கள் நான் பதிலுரை இங்கே வழங்க வேண்டும். 36 நாட்கள் இந்த அவை கூட வேண்டும். 36 நாட்களும் சொல்லக்கூடிய அளவுக்கு அத்தனை சாதனைகளைப் புரிந்துள்ளோம்.
 
அவற்றையெல்லாம் சுருக்கி, கிட்டத்தட்ட ஒற்றரைமணி நேரத்தில் சொல்லக்கூடிய அளவுக்கு கொண்டுவருவது என்பது பகீரதப்பிரயத்தனம். எதைச் சொல்வது, எதை விடுவது என்று பார்த்துப் பார்த்து தயாரிக்கப்பட்ட பதிலுரை இது.
 
ஆகவே, இன்னும் நாங்கள் செய்துள்ள சாதனைகளைச் சொல்ல வேண்டும் என்றால், ஏராளமானவை உள்ளன. ஆனால் நான் குறிப்பிட்ட விரும்புவது எனன் வென்றால், எங்களுடைய செயல்பாடு, எங்களுடைய திட்டங்கள் எல்லாமே மக்களுக்காகத்தான்.
 
எங்களைப் பொறுத்தவரை எந்தச் சுய நலமும் இல்லை. பொது நலம்தான். மக்கள் நலம்தான். அதிமுக தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம். 
 
மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட ஒரு இயக்கம். இந்த இயக்கம் இருக்கின்ற வரை, நான் இருக்கின்ற வரை, இந்த இயக்கம் மென்மேலும், மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெறச் செயல்படும்.
 
எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அதிமுக மக்களுக்காகவே இயங்கும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.