வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: திங்கள், 23 நவம்பர் 2015 (19:20 IST)

அப்துல் கலாமின் அண்ணன் மகன் பாஜகவில் இருந்து அதிரடி விலகல்

டெல்லியில் வாழ்ந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டை அறிவுசார் மையமாக மாற்ற பாஜக அரசு தவறியதால், அக்கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் இருந்தும் விலகுவதாக கலாமின் அண்ணன் மகன் சையது காஜா இப்ராஹீம் தெரிவித்துள்ளார்.


 
 
கடந்த 2012 ஆம் ஆண்டு தற்போதைய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு மாநில துணைத் தலைவராக பதவி அளிக்கப்பட்டது. மேலும, கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், தற்போது நடைபெற்ற தமிழக சட்டசபை இடைத் தேர்தல்களிலும் அவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், தனது விலகல் கடிதத்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு இன்று அனுப்பியுள்ளார். இதில் பாஜக கட்சியிலிருந்து தனது விலகல் குறித்த விளக்கத்தையும் குறிப்பிட்டுள்ளார். 
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது," கடந்த ஜுலை மாதம் 27 அன்று எனது சித்தப்பாவும் முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் காலமானார்.
 
இதனை தொடர்ந்து டெல்லியில் கலாம் வாழ்ந்த வீட்டை தேசிய அறிவுசார் மையமாக அமைக்க வேண்டும் என்பது எனது குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய மக்களின் கோரிக்கையாக இருந்தது. இந்த அறிவுசார் மையத்தின் மூலம் அப்துல் கலாமின் தொலை நோக்குள்ள பார்வைகளை நமது மாணவர்களும், இளைஞர்களும் கற்றுக் கொள்ள முடியும் என்பது தான் இதன் முக்கிய கருவாக இருந்தது. ஆனால், கலாம் வாழ்ந்த வீட்டை மத்திய அமைச்சல் மகேஷ் சர்மாவிற்கு ஒதுக்கப்பட்டு அவர் தற்போது வசித்து வருகிறார்.
 
ஒட்டு மொத்த இந்திய மக்களின் கோரிக்கையை, நான் மக்கள் பணியாற்றுவதற்காக அங்கம் வகித்து கடமையாற்றி வரும் மத்தியில் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது. ஆகவே, மாணவர்கள், இளைய சமுதாயம், பொதுமக்கள் அப்துல் கலாம் மீது மட்டற்ற பாசம் வைத்துள்ளவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாஜகவின் பொறுப்பிலிருந்தும் அதன் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் விலகுகிறேன்.
 
நமது நாட்டிற்கும், மாணவர்களுக்கும், இளம் விஞ்ஞானிகளுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கக்கூடிய அளவில் எனது சிறிய தந்தையார் அப்துல் கலாம் அவர்கள் காட்டி தந்த வழியில் எனது பயணமும், செயற்பாடும் பொது வாழ்வில் தொடர்ந்து பயணிக்கும்" என்று அவர் கூறியுள்ளார்