ஓட்டு போட வரும்போது காக்கி பேண்ட், வெள்ளை சட்டையுடன் வந்த அண்ணாமலை.. ஏதேனும் குறியீடா?
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலைச் சந்தித்து வரும் நிலையில், கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட பி.எஸ்.ஜி கலைக் கல்லூரியில் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது வாக்கைப் பதிவு செய்தார்.
தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கிவிடாமல் அதிக அளவில் வந்து வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தமிழகத்தில் ஆங்காங்கே பணப்பட்டுவாடா மற்றும் நகை விநியோகம் போன்ற முறைகேடுகள் துணிச்சலாக நடைபெறுவதாகவும், இது குறித்து புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
குறிப்பாக, தி.மு.க-வினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக குறிப்பிட்ட அவர், தேர்தலில் பணம் ஒருபோதும் ஜெயிக்காது, ஜனநாயகமே வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார். போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் ஆணையம் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் என்றார்.
வாக்களிக்க வந்தபோது அவர் அணிந்திருந்த வெள்ளை சட்டை மற்றும் பிரவுன் நிற பேண்ட் ஏதேனும் குறியீடா என்ற கேள்விக்கு, "நான் காவல்துறையில் இருந்தவன் என்பதால் எப்போதும் என்னுடன் காக்கி இருக்க வேண்டும் என விரும்புகிறேன். விஜய், ஜெகன்மோகன் ரெட்டி போன்ற பலரும் இந்த உடை பாணியை பின்பற்றுகிறார்கள். இதற்கும் எந்த குறியீட்டிற்கும் சம்பந்தம் இல்லை; நான் எப்போதும் நியாயத்தின் பக்கமே நிற்கிறேன்" என்று தெளிவுபடுத்தினார்.
Edited by Siva
