வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 26 செப்டம்பர் 2015 (21:32 IST)

”தமிழ்நாட்டு மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது” - கருணாநிதி

தமிழ்நாட்டு மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது என்பதை அமைச்சர் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்சார உற்பத்தி பற்றியும், மின்வெட்டு பற்றியும் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் கடந்த நான்கரை ஆண்டு காலமாக தமிழ்நாட்டு மக்களை எப்படி உண்மைக்கு மாறான செய்திகளை அடுக்கடுக்காகச் சொல்லி ஏமாற்றி வருகிறார்கள் என்று அவ்வப்போது நாம் எடுத்துக் கூறியே வருகிறோம்.
 
அதிமுக ஆட்சியின் அவலங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு வரும் தமிழ்நாட்டு மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது என்பதை அமைச்சர் உணரும் காலம் அண்மையிலே தான்; வெகு தொலைவில் இல்லை! இன்னும் சொல்லப்போனால், 24-11-2013 தேதிய நாளிதழில் "தமிழகத்தில் சூரிய மின் உற்பத்தித் திட்டம் அம்பேல்" என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளி வந்தது.
 
அந்தச் செய்தியில், "இந்தத் திட்டத்தில் ஏராளமான குளறுபடிகள் உள்ளதாலும், அதைக் கவனிக்க மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆர்வம் காட்டாததாலும் சூரிய மின் சக்தி சாதன உற்பத்தியாளர்கள், முதல்வரைச் சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்" என்றும் அப்போதே எழுதியது.
 
ஒட்டுமொத்தமாக அமைச்சரின் பதிலில் தற்போது மின்வெட்டு இல்லை என்றும், மின் தடைதான் உள்ளது என்றும் சொல்லியிருக்கிறார். இதிலிருந்து மின்தடை என்ற தொழில்நுட்பப் பெயரால் எதார்த்தத்தில் தொடர்ந்து நிலவிவரும் மின்வெட்டு என்பதை இல்லை என்பதைப் போலச் சாமர்த்தியமாகச் சொல்லி நிரூபிக்கப் பார்க்கிறார்கள்.
 
மின்வெட்டு இருக்கிறதா இல்லையா என்பதை நானல்ல, ஏடுகளில் வெளிவந்த செய்தியையே தெரிவித்து விட்டேன். ஏன், நேற்று வெளிவந்த நாளிதழில் "மின்வெட்டில் இருளில் மூழ்கிய ஜி.எச்., மெழுகு வர்த்தி ஏற்றி சமாளித்த நோயாளிகள் என்ற தலைப்பில் ஒரு செய்தியும், "மூன்று மணி நேர மின்வெட்டால் அவதி - 2,170 மெகாவாட் பற்றாக்குறை" என்ற தலைப்பில் ஒரு செய்தியும் வெளிவந்துள்ளன.
 
இப்படி நாட்டில் நடப்பதையெல்லாம் மறைத்துவிட்டு மின்வெட்டே இல்லை என்று அமைச்சர் பேரவையில் உண்மைக்கு மாறான தகவலைச் சொல்வதால் மின்வெட்டால் மக்கள் அனுபவித்து வரும் வேதனைகள் குறைந்து விடுமா? சிலரைப் பல நாள் ஏமாற்றலாம், பலரைச் சிலநாள் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது!" இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.