முக்தார் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்காது என தெரிகிறது.. பின்னணியில் யார்? அலிஷா அப்துல்லா கேள்வி
பிரபல கார் பந்தய வீராங்கனையான டாக்டர் அலிஷா அப்துல்லா, சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று தமிழக அரசியல் மற்றும் சமூக ஊடக வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் முக்தார் என்பவர் மீது காவல்துறை இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது குறித்து அவர் தனது பதிவில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தனக்கு கிடைத்துள்ள உள்விவரங்களின்படி, முக்தார் கைது செய்யப்பட மாட்டார் என்று தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அலிஷா, "இது திட்டமிட்டே செய்யப்படுகிறதா? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? இது போன்ற ஆண்கள் யாரை பற்றி வேண்டுமானாலும் அவதூறாக பேசிவிட்டு, எந்த தண்டனையும் இல்லாமல் தப்பித்துவிடலாமா?" என்று கொந்தளித்துள்ளார். மேலும், முக்தார் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து செல்வார் என்பதற்கு ஒரு புகைப்படத்தையும் அவர் ஆதாரமாக பகிர்ந்துள்ளார்.
இத்தகைய நபர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அரசு இன்னும் சும்மா விட்டுவிடப் போகிறதா என்பதை அரசே தீர்மானிக்கட்டும் என்றும் அவர் சாடியுள்ளார். அவதூறு மற்றும் ஆபாச பேச்சுக்கள் தொடர்பாக புகார்கள் எழுந்தும் முக்தார் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என்று அலிஷா அப்துல்லா எழுப்பியுள்ள இந்த கேள்வி, தற்போதைய சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Edited by Siva
