1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 6 ஜூன் 2015 (18:51 IST)

முன்னாள் அதிமுக அமைச்சரின் மனைவி தற்கொலை முயற்சி; எம்.பி மீது குற்றச்சாட்டு

அதிமுக முன்னாள் அமைச்சரின் மனைவி ஒருவர், திருச்சி எம்.பி ப.குமார் மீது புகார் தெரிவித்ததோடு, தற்கொலைக்கும் முயற்சி செய்துள்ளார்.
 

 
முன்னாள் அதிமுக அமைச்சர் மரியம்பிச்சை 2011ஆம் ஆண்டு மே மாதம் சாலை விபத்து ஒன்றில் மரணமடைந்தார். தற்போது, அவரது மனைவி கஸ்தூரி மரியம்பிச்சை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள திரையரங்கு ஒன்றை நடத்தி வருகிறார். திருச்சி மாவட்ட நலக்குழுக்கு சொந்தமான இந்த திரையரங்கை கஸ்தூரி மரியம்பிச்சை 5 ஆண்டு குத்தகை ஒப்பந்தத்தில் நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில் உரிமம் புதுப்பிக்க தவறியதாக கூறி கடந்த மாதம் இந்த திரையரங்கத்திற்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. இதனை எதிர்த்து கஸ்தூரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் திரையரங்கிற்கு சீல் வைக்கவோ தடை விதிக்கவோ தொழில் பாதிப்பு ஏற்படுத்துவோ கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
ஆனாலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் கோட்டாச்சியர் கணேசசேகரன் திரையரங்கிற்கு சீல் வைத்தார். இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமாரின் துண்டுதலின் பெயரில் மாவட்ட நிர்வாகம் பூட்டி சீல் வைத்துள்ளதாகவும், குமாரின் துண்டுதலால் திரையரங்கத்தை நடத்தவிடாமல் தொடர் தொல்லைகள் தருவதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
 
மேலும், கஸ்தூரி தமக்கு சொந்தமான கலையரங்கம் திரையரங்கின் உள்ளேயே தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து காப்பாற்றியுள்ளனர். இதனையடுத்து அந்த திரையரங்கிற்கு காவல்துறை பாதுகாப்பளித்துள்ளது.