செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: ஞாயிறு, 8 மார்ச் 2015 (19:28 IST)

அதிமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் 5 பேர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அதிமுக கிளைச் செயலாளரை  ஆபாசமாகப் பேசி தாக்கிய, ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட 5 பேர் மீது  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை  தேடி வருகிறார்கள்.
 
கூமாப்பட்டி, ராமசாமியாபுரம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் கி.கிருஷ்ணமூர்த்தி  (49). இவர் அதிமுக கிளைச் செயலாளர்.இவர் கான்சாபுரம் ஊராட்சி  எழுத்தராகவுள்ள கு.அய்யனார் குறித்து கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தகவல்  அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கேள்வி  கேட்டு மனு தாக்கல் செய்திருந்துள்ளார். இதனை அறிந்த ஊராட்சி எழுத்தர்  அய்யனார், அவ்வப்போது கிருஷ்ணமூர்த்தியை மிரட்டி வந்துள்ளார்.
 
புதன்கிழமை இரவு சொந்த வேலையாக கிருஷ்ணமூர்த்தி தனது இரு சக்கர  வாகனத்தில் ராமசாமியாபுரத்திலிருந்து கிருஷ்ணன்கோவில் நோக்கி வந்து  கொண்டிருந்துள்ளார்.முனியாண்டி கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது,  ஊராட்சி எழுத்தர் அய்யனார் மற்றும் நால்வர் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை  வழிமறித்து நிறுத்தியுள்ளார்கள். கிருஷ்ணமூர்த்தியை ஆபாசமாகப் பேசி,  அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள். இதில் பலத்த காயம் அடைந்த  கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்  பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாகவுள்ள  ஊராட்சிமன்ற எழுத்தர் அய்யனார் உள்ளிட்ட 5 பேரைத் தேடி வருகிறார்கள்.