செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 19 மே 2014 (18:25 IST)

கன்னியாகுமரி, தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளர்கள் அதிரடி நீக்கம்

தேர்தல் முடிவுகள் எதிரொலியாக, கன்னியாகுமரி, தர்மபுரி, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி மாவட்ட அதிமுக செயலாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிவிப்பில், "தர்மபுரி மாவட்டச் செயலாளர் கே.பி.அன்பழகன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். புதிய செயலாளர் நியமிக்கப்படும் வரை அந்தப் பணிகளை அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான பி.பழனியப்பன் கூடுதலாக கவனிப்பார்.
 
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஏ.செல்வராஜ், கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ஜாண் தங்கம் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு ஆகிய மாவட்ட கழகங்களுக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் நியமனம் செய்யப்படும் வரை, மாவட்டக் கழகப் பணிகளை அ.தமிழ்மகன் உசேன் கவனித்துக் கொள்வார்.
 
திருவள்ளூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.வி.ரமணா, இன்று முதல் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். வேறொருவர் நியமிக்கப்படும் வரை, மாவட்டக் கழகப் பணிகளை மாதவரம் வி.மூர்த்தி கவனித்துக் கொள்வார்.
 
அதேபோல் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஏ.அன்பழகன், மாநில ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ. ஆகியோர் அவர்கள் வகிக்கும் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படும் வரை, அந்தப் பணிகளை புதுச்சேரி மாநில துணைச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பி.புருஷோத்தமன் மேற்கொள்வார்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.