செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (11:27 IST)

அங்க அடையாளங்களை சரிபார்க்க நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் ஆஜர்

அங்க அடையாளங்களை சரி பார்ப்பதற்காக நடிகர் தனுஷ் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.


 

 
மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி ஆகியோர், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன். எங்களின் பராமரிப்பு தொகையாக மாதம் ரூ.65 ஆயிரத்தை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மதுரை மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 
ஆனால் அவர்கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை என்றும், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.  அந்த வழக்கு கடந்த பிப்ரவரி 8ம் தேதி விசாரணைக்கு வந்தது.


 

 
இதில் தனுஷ் தரப்பில் அவரது பத்தாவது வகுப்பு பள்ளி சான்றிதழ் சமர்பிக்கப்பட்டது. அதில் அவரது அங்க அடையாளங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.  ஆனால், கதிரேசன் தரப்பில் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பள்ளி மாற்று சான்றிதழில் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. எனவே,  வழக்கை விசாரித்த நீதிபதி, அங்க அடையாளங்களை சரிபார்க்க, பிப்ரவரி 28ம் தேதி (இன்று) தனுஷ் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 
 
அதன்படி, இன்று தனுஷ் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரானார். எனவே, தனுஷின் அங்க அடையாளங்களை சரி பார்த்து இன்றே அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், பதிவாளர் அறையிலேயே மருத்துவர் ஒருவர் சரிபார்க்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். 
 
மேலும், இந்த வழக்கை மார்ச் 2ம் தேதிக்கு தள்ளி வைத்து அவர் உத்தரவிட்டார்.