1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 15 ஏப்ரல் 2015 (20:27 IST)

20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்கும்வரை பாமக போராடும்: ராமதாஸ்

ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்கும்வரை பாமக தொடர்ந்து போராடும் என்று அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 
இது குறித்து ராமாதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவித் தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திரக் காவல்துறையினர் கடத்திச் சென்று சுட்டுக் கொன்றனர் என்பது பாமகவின் குற்றச்சாட்டாகும். இதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கொல்லப்பட்டவர்களின் உடல்களை மறு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று பாமக விரும்பியது. இந்தப் படுகொலை தொடர்பாக பாமகவின் உண்மை கண்டறியும் குழுவினர் ஆந்திரத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் ஆந்திர அதிரடிப் படையினர் மீது அம் மாநிலக் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இதன் அடிப்படையில் தொடர்புடைய அதிரடிப்படை அதிகாரிகள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை பாமக தொடர்ந்து போராடும் என்று அவர் கூறியுள்ளார்.