1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Erode velusamy
Last Modified: திங்கள், 21 ஏப்ரல் 2014 (16:33 IST)

இறந்த தாயை விட்டு பிரியாமல் தவித்த குட்டி யானை

ஈரோடு அருகே பர்கூர் வனப்பகுதியில் இறந்த தன் தாய் யானையை விட்டு பிரிந்து செல்லாமல் கண்ணீர் விட்டு கதறும் குட்டியானையின் பாசபோராட்டத்தை பார்க்கும் மக்களும் கண்ணீர் விடுகின்றனர்.
ஈரோடு வனமண்டலத்திற்கு உட்பட்டது அந்தியூர் வனப்பகுதி. இங்கு யானைகள் கூட்டம், கூட்டமாக வாழ்ந்து வருகிறது. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டள்ளது. இதனால் யானைகள் தண்ணீர் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்தியூர் வனத்திற்குட்பட்ட பர்கூர் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.
 
அப்போது அங்குள்ள தொட்டகோம்பை அருகே உள்ள தண்ணீர் பள்ளத்தின் அருகில் உள்ள வனக்குட்டை அருகே ஒரு யானை கீழே விழுந்துகிடந்தது. ஐந்து யானைகள் அந்த யானையை சுற்றிலும் நின்றுகொண்டிருந்தது. இதை கவனித்து வனத்துறையினர் அந்தியூர் ரேஞ்சர் ஆனத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது கீழே விழுந்து கிடந்த யானையை தவிர மற்ற யானைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
ஆனால் அந்த யானை அருகே ஆறு மாதங்ளே ஆன ஆண் யானை குட்டி ஒன்று மட்டும் தன் துதிக்கையில் கீழே விழுந்து கிடந்த யானையை தடவியவாறு கண்ணீர் சொட்ட, சொட்ட நின்றகொண்டிருந்தது. இதை கவனித்த வனத்துறையினர் அந்த குட்டி யானை குட்டியை பிடித்து தூ =ரத்தில் விட்டனர். பின் கீழே விழுந்து கிடந்த யானையை பரிசோதித்தபோது அது இறந்து கிடந்தது தெரியவந்தது.
 
தன் தாய் யானை இறந்தது தெரிந்துதான் கண்ணீர் விட்டு குட்டியானை நின்றது பின்னர் தெரிந்தது. சிறிது நேரத்தில் இறந்து கிடந்த தாய் யானையிடம் ஓடிவந்த குட்டியானை தன் துதிக்கையால் மீண்டும் தன் யானையை வருடியவாடி பிளிரிக்கொண்டு கண்ணீர் விட்டது. இதை கவனித்த வனத்துறையினர் மற்றும் பொதுமக்களும் கண்ணீர் விட்டனர்.
 
சிறிது நேரத்தில் தாயிடம் இருந்து அந்த குட்டியானையை விரட்டினர் ஆனால் அது வனப்பகுதிக்குள் செல்லாமல் அருகே உள்ள வனக்குட்டை அருகே சென்று நின்றுவிட்டது. பின் இறந்த யானையை பிரேத பரிசோதனை செய்து அந்த யானைக்கு மாலை அணிவித்து பூஜை செய்து அடக்கம் செய்தனர். அதுவரை அங்கே நின்று கண்ணீர் சொட்ட, சொட்ட தாய் யானையை அடக்கம் செய்வதை கவனித்த குட்டியானை வனத்துறையினர் அப்பகுதியை விட்டு சென்றவுடன் அடக்கம் செய்த இடத்தில் வந்து நின்றுகொண்டு தன் துதித்கையில் அந்த மண்ணை எடுத்து வீசியவாறு பிளிரியது பார்க்கும் மக்களை பதற வைத்தது.