வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடல் ஆரோக்கியத்தை காக்கும் திரிபலா பொடி...!!

திரிபலா என்பது நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று மூலிகைகள் உள்ளடங்கிய கூட்டுப்பொருள். இதனை சாப்பிடுவதால் உடலுக்கு  பலவிதங்களில் நன்மை வந்துசேரும்.

நாம் உண்ண கூடிய உணவு ஜீரணமாகாமல் இருக்கும் பட்சத்தில், வயிற்று பிரச்சினைகள் ஏற்பட கூடும். இது போன்ற பிரச்சினைக்கு தீர்வு காண இந்த திரிபலா  பொடி சூரணம் மிகவும் ஏற்றது.
 
இந்த திரிபலா பொடியை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் சம பங்கு எடுத்து நிழலில் நன்றாக உலர்த்தி  பொடியாக திரித்துக் கொள்ளலாம். அல்லது நாட்டு மருந்துக்கடையில் வாங்கி பயன்படுத்தலாம்.
 
தான்றிக்காய் செரிமானத்தை மேம்படுத்துவதோடு பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுக்கிருமிகளுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. இது இரத்தத்தில்  சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் துணை புரியும்.
 
கடுக்காய் வயிறு தொடர்பான பல்வேறு உபாதைகளுக்கு நிவாரணியாக செயல்படுகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்க உதவும். இது நுரையீரல் பாதையில் படிந்திருக்கும் சளியை நீக்கி நுரையீரல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.
 
திரிபலாவில் இருக்கும் கசப்பு சுவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும். கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்து  குளுகோஸின் அளவை சமநிலைப்படுத்தும். சைனஸ் பிரச்சினையையும் போக்கும்.
 
இந்த சூரணம் சுவாசப் பாதையில் அடைபட்டிருக்கும் சளியை நீக்கும். ரத்தசோகை பாதிப்புக்குள்ளானவர்கள் திரிபலாவை சாப்பிட்டு வந்தால் போதும். திரிபலாவிற்கு  ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும் தன்மை இருக்கிறது.
 
திரிபலா இதய நோய் வராமல் தற்காத்துக்கொள்ளவும் உதவும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் திரிபலாவில் உள்ள கசப்பு சுவை உதவி செய்கிறது.
 
குறிப்பாக திரிபலா வயிற்றில் பூச்சிகள் வளர்வதை தடுக்கும். மட்டுமல்லாது வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்ற உதவும். அதோடு வயிற்றுப்புண்களை  ஆற்றும்.
 
இந்த சூரணம் எப்படி பயன்படுத்துவதென்றால், ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் திரிபலா பொடியை கலந்து வெறும் வயிற்றில் பருக வேண்டும். இரவில் தூங்க செல்லும் போதும் பருகலாம்.