வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (17:03 IST)

'மோடி அலை' தெரியவில்லை என்றால் பிரதமருக்கு கிட்டப்பார்வை கோளாறு - அருண் ஜேட்லி கடும் விமர்சனம்

'மோடி அலை' கண்ணுக்குத் தெரியவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினால் அவருக்கு கண்களில் கிட்டப்பார்வை கோளாறு இருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
அசாம் மாநிலம் திஸ்பூரில் நேற்று (வியாழக்கிழமை) வாக்குப்பதிவு செய்த பிரதமர் மன்மோகன் சிங், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது:- "தேசத்தில் 'மோடி அலை' இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி ஒன்று இருப்பதாக ஊடகங்கள்தான் மிகைப்படுத்துகின்றன. காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்றுவிடும் என்பதற்கு சாத்தியம் இல்லை. மே 16 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வரை காத்திருங்கள். காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும்" என கூறியிருந்தார்.
 
இந்நிலையில் பிரதமரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி, "மோடி அலை கண்ணுக்குத் தெரியவில்லை என்றால் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கண்களில் கிட்டப்பார்வை கோளாறு இருக்க வேண்டும். இல்லை என்றால் மோடி அலையை அவர் பார்த்தும் அதனை ஏற்றுக் கொள்ளமுடியாமல் அவ்வாறு கூறியிருக்க வேண்டும்.
 
நரேந்திர மோடிக்கு உள்ள ஆதரவை பார்த்து சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் குழப்பத்தில் இருக்கின்றனர். ஆட்சி அரியணையில் இருந்து இறங்கவுள்ள ஒரு அரசு தனது சாதனைகளைச் சொல்லி கரை சேர முயற்சிக்காமல் எதிர்கட்சியை குற்றம்சாற்றிக் கொண்டிருப்பதை முதல் முறையாக பார்க்கிறேன்.
 
நரேந்திர மோடி நல்லாட்சிக்கான திட்டங்களை வகுத்து அதன்படி வெற்றிகரமாக செயல்படுகிறார். நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களிலும் கூட மோடிக்கு ஆதரவு வலுத்துள்ளது. ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு அலை வீசுகிறது". இவ்வாறு அருண் ஜேட்லி பேசியுள்ளார்.