செய்தியாளர்களை சந்திக்கும் பிரதமர்; பதவி விலகுகிறாரா?
2014
ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் மன்மோகன் சிங் ராகுல் காந்திக்கு வழிவிட்டு, வரும் மூன்றாம் தேதி பதவி விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், காங்கிரஸ் தரப்பில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி முன்னிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமைதான் முடிவு எடுக்க வேண்டும் என்றும், விரைவில் அதுகுறித்து அறிவிக்க வேண்டும் எனவும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருந்தார்.
நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு பாதகமாக வந்ததால், பிரதமர் மாற்றப்பட வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூறி வந்தனர். இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் வரும் மூன்றாம் தேதி செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பில், பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதாக அவர் தெரிவிப்பார் என கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. தேர்தல் முடிவடையும் வரை அவர் பதவி விலக மாட்டார் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.