வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (15:37 IST)

'பாலியல் வன்கொடுமை: பெண்களையும் தூக்கிலிட வேண்டும்' - மீண்டும் சர்ச்சை

பாலியல் வன்கொடுமை  குறித்து 'ஆண்கள் தவறு செய்வார்கள், அதற்காக அவர்களை தூக்கிலிட முடியுமா'  என பேசி சர்ச்சையில் சிக்கிய சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவை தொடர்ந்து அதே கட்சியை சேர்ந்த அபு அஸ்மி, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பெண்களையும் தூக்கிலிட வேண்டுமென பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 
 
மொரடாபாதில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங், அண்மையில் சக்தி மில்ஸ் வளாகத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய வழக்கில் மூன்று குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதை குறிப்பிட்டு,  பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை தூக்கிலிடும் சட்டத்தில் மாற்றம்  கொண்டுவர  வேண்டுமெனவும், ஆண்கள் தவறுகள் செய்வார்கள், அதற்காக அவர்களை தூக்கிலிட முடியுமா எனவும் பேசி சர்ச்சையில் சிக்கினார்.
 
இச்சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ள நிலையில்,  
 
மற்றொரு சமாஜ்வாதி தலைவர் அபு அஸ்மி, ' கற்பழிப்பு தண்டனைக்குரிய குற்றம். ஆனால்,  இங்கு பெண்களுக்கு எதுவுமே நடைபெறுவதில்லை. பெண்கள் குற்றம் செய்தால் கூட ஆண்களுக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது.
 
இந்தியாவில் சம்மதத்துடன்  உறவு வைத்துகொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதே நபர் புகார் அளித்தால் இது பிரச்சனையாகிவிடுகிறது. 
 
திருமணம் ஆன பெண்ணோ, அல்லது திருமணம் ஆகாத பெண்ணோ, அவர் சம்மதத்துடனோ அல்லது சம்மதம் இல்லாமலோ ஒரு ஆணுடன் சென்றால் அவர் தூக்கிலிடப்பட வேண்டும். இருவருமே துக்கிலிடப்பட வேண்டும்'  என பேசியுள்ளார். 
 
ஏற்கனவே முலாயம் சிங் யாதவ் விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நிலையில், அதே கட்சியை சேர்ந்த மற்றொரு தலைவர் இவ்வாறு பேசியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.