மம்தா பானர்ஜிக்கு மனநல சிகிச்சை தேவை: பாஜக கிண்டல்..!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரிக்கும் இடையிலான அரசியல் போர் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் தேர்தல் ஆணையம் முறைகேடு செய்வதாகவும், பாஜகவின் செயலியை பயன்படுத்துவதாகவும் மம்தா பானர்ஜி சமீபத்தில் குற்றம் சாட்டினார். தகுதியான வாக்காளர்களை நீக்கிவிட்டு, ஜனநாயகத்திற்கு எதிராக ஆணையம் செயல்படுவதாக அவர் சாடினார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்த பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜிக்கு "மனநல சிகிச்சை" தேவை என்று மிக கடுமையாக விமர்சித்துள்ளார். ஆதாரமற்ற புகார்களை கூறுவதை நிறுத்திவிட்டு, மம்தா உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்றும் அவர் எள்ளி நகையாடினார்.
தேர்தல் ஆணையத்தின் மீதான மம்தாவின் தொடர் விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. திரிணமூல் காங்கிரஸ் இப்புகார் தொடர்பாக நீதிமன்றத்தை நாடத் திட்டமிட்டுள்ள நிலையில், மேற்கு வங்க அரசியல் களம் தேர்தல் நெருங்கும் வேளையில் அனல் பறக்கிறது.
Edited by Mahendran