வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த தடை விதிக்க முடியாது. சுப்ரீம் கோர்ட் அதிரடி அனுமதி..!
பஞ்சாப் மாநிலத்தில் நாளை நகராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த பஞ்சாப் மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க திட்டவட்டமாக மறுத்து தள்ளுபடி செய்தது. "தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தற்போது எங்களால் எதையும் செய்ய முடியாது; எஞ்சிய நேரமும் இல்லை" என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
தேர்தல் அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே மனுதாரர் நீதிமன்றத்தை அணுகியிருக்கலாம் என்றும், கடைசி நேரத்தில் வந்து ஒட்டுமொத்த தேர்தல் செயல்முறையையும் முடக்க முடியாது என்றும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
மேலும், இத்தேர்தலை கண்காணிக்கத் தனி கண்காணிப்பாளரை நியமிக்க கோரிய கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. பஞ்சாபில் உள்ள 8 மாநகராட்சிகள் உட்பட மொத்தம் 104 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை திட்டமிட்டபடி வாக்குச்சீட்டு முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வாக்குகள் அனைத்தும் மே 29 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
Edited by Siva
