மாணவர்கள் ஃபேனில் கயிறு கட்டி தற்கொலையை தடுக்க இரும்பு வலை.. நெட்டிசன்கள் கிண்டல்..!
இந்தியாவின் பயிற்சி மையங்களின் தலைநகராக கருதப்படும் கோட்டாவில் உள்ள மாணவர் விடுதி ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதை தடுப்பதற்காக விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள் கனமான இரும்பு வலைகளால் மூடப்பட்டிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஐஐடி-ஜேஇஇ மற்றும் நீட் போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியில் சமீபகாலமாக அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுக்க விடுதி உரிமையாளர்கள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே விசிறிகளில் அதிக எடை விழுந்தால் தானாகவே கழன்றுவிடும் வசதி கொண்ட 'ஸ்பிரிங்' பொருத்தப்பட்ட விசிறிகளை அறிமுகப்படுத்த அதிகாரிகள் வலியுறுத்தியிருந்தனர். ஆனால், தற்போது வைரலாகியுள்ள இந்த இரும்பு வலை அமைப்பு அனைத்து விடுதிகளிலும் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டதா என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை.
இது போன்ற இயந்திரத்தனமான தீர்வுகளுக்கு பதிலாக, மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க முறையான ஆலோசனைகள் மற்றும் மனநல ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த வீடியோவிற்கு இணையவாசிகளிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. "கல்வி முறையை மேம்படுத்தாமல் இது போன்ற மாற்றங்களை செய்வதால் பயன் இல்லை" என்றும், "இரும்பு வலையில் ஏறி தற்கொலை செய்ய முயன்றால் என்ன செய்வது?" என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் இந்தியாவின் கல்வி சூழலில் நிலவும் கடுமையான போட்டி மற்றும் அதனால் ஏற்படும் மனநல பாதிப்புகள் குறித்த விவாதத்தை மீண்டும் முன்னெடுத்துள்ளது.
Edited by Siva