வங்கியில் மோசடியை தடுக்க குரல் தொழில் நுட்ப கருவி - சிபிஐ
வங்கியில் மோசடியை தடுக்க குரல் தொழில் நுட்ப கருவியை பயன்படுத்த வேண்டும் என்று சிபிஐ அதிகாரி கேசவ் குமார் கூறியுள்ளார்.
மும்பையில் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்ட 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மும்பை சிபிஐ இணை இயக்குநர் கேசவ் குமார் கலந்து கொண்டு பேசுகையில், ”வங்கியில் மோசடி நடைபெறுவதை தடுக்க அதிகாரிகள், ஊழியர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.
இதற்காக நவீன தொழில்நுட்பத்தை அதிகாரிகள் பயன்படுத்த முன்வர வேண்டும். வங்கியில் கடன் கேட்டு வருபவர்களின் நோக்கத்தை முன்கூட்டியே அறிந்தால் மோசடியை எளிதில் தடுக்க முடியும். இதற்காக நவீன குரல் தொழில்நுட்ப கருவியை பயன்படுத்த வேண்டும்.
இந்த கருவியின் மூலம் கடன் கேட்க வருபவர் குரலை வைத்து மனதில் மோசடி செய்ய நினைக்கிறாரா என்பதை கண்டுபிடிக்க முடியும். இதை முன்கூட்டியே அறிந்து கொள்வதால் மோசடி ஆட்களுக்கு கடன் கொடுக்காமல் தவிர்த்து விடலாம்” என்று தெரிவித்துள்ளார்.