வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 5 மே 2014 (17:27 IST)

அலகாபாத் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி மீது செருப்பு வீச்சு

உத்தர பிரதேசத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் ஆயுதபடை மைதானத்தில் நேற்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. மோடி தனது பேச்சை தொடங்கினார். அப்போது பாதுகாப்பு போலீசார் அமர்ந்திருந்த வரிசையிலிருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 'மோடி ஒழிக' என்று கோஷமிட்டபடியே மோடியை நோக்கி செருப்பை வீசியெறிந்தார்.
 
ஆனால் மேடைக்கும், போலீசாரின் பாதுகாப்பு தடுப்பு வேலிக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி காணப்பட்டதால் செருப்பு மேடையிலிருந்து சற்று தள்ளி தொலைவிலேயே விழுந்தது.
 
இதனால் கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது. உடனடியாக போலீசார் செருப்பு வீசிய திசையை நோக்கி விரைந்தனர். ஆனால், அங்கு அந்த ஆசாமியை அடையாளம் காணமுடியவில்லை. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 
பின்னர் போலீசாரும், பாஜக தலைவர்களும் தொண்டர்களை அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர். பின்னர் தொடர்ந்து மோடி பேசினார். மோடியை நோக்கி செருப்பு வீசப்பட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.