12ஆம் வகுப்பு மாணவன் அதிவேகமாக ஓட்டிய கார்.. பரிதாபமாக பலியான 6 வயது சிறுவன்..!
லக்னோவில் பள்ளி பிரியாவிடை விழாவை முடித்துவிட்டு திரும்பிய 12-ஆம் வகுப்பு மாணவனின் அதிவேக கார் விபத்துக்குள்ளானதில், 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை 6 மணியளவில் கௌரவ் சிங் என்ற மாணவன் ஓட்டி வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த பைக் மீது முதலில் மோதியது. இதில் நிலைதடுமாறிய கார், அங்கு நின்றிருந்த மீனா தேவி, சாதனா படேல் மற்றும் அவரது 6 வயது மகன் தீக்ஷாந்த் உள்ளிட்டோர் மீது பயங்கரமாக மோதியது.
தொடர்ந்து ஒரு ஈ-ரிக்ஷா மற்றும் ஆட்டோ மீதும் கார் மோதி நின்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தீக்ஷாந்த் மருத்துவமனையில் உயிரிழந்தான். மற்ற நால்வர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்தவுடன் காரின் டயர் வெடித்த நிலையில், மாணவன் கௌரவ் சிங் அங்கிருந்து தப்பியோடினார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த மாணவனை கைது செய்தனர். அதிவேகமாக கார் ஓட்டியதே இந்த விபத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Edited by Siva