ரீல்ஸ் மோகத்தில் போன அப்பாவியின் உயிர்!.. வீடியோ வெளியிட்ட பெண் தலைமறைவு!...
பெண்களுக்கு பல இடங்களில் பாலியல் தொல்லை இருப்பது உண்மைதான் என்றாலும் சில சமயம் இல்லாத ஒன்றை பெரிதுபடுத்தி பெண்கள் பேசுவதும் பிரச்சினையாக மாறிவிடுகிறது. பல வருடங்களுக்கு முன்பு வரதட்சணை தொடர்பாக பெண்களுக்கு ஆதரவாக கொண்டுவந்த சட்டத்தை பல பெண்கள் தவறாக பயன்படுத்தி பல ஆண்களை பழிவாங்கினார்கள். அதன்பின்னரே அதைப்பற்றிய விழிப்புணர்வு பலருக்கும் ஏற்பட்டது.
இப்போது பாலியல் பிரச்சினைகளையும் பல பெண்கள் தங்களது சாதகமாக பயன்படுத்தி பல ஆண்களின் வாழ்க்கையில் விளையாடி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவம்தான் சமீபத்தில் கேரளாவில் நடந்தது . கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த தீபக் என்கிற நபர் அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அதே பேருந்தில் பயணித்த ஷிம்ஜிதா முஸ்தபா என்கிற பெண் தீபக் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுட்டதாக சொல்லி அதை செல்போனில் வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அவர் வெளியிட்ட சில நிமிடங்களில் அந்த வீடியோ வைரலாகி 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்தனர்.
அதில் பலரும் தீபக்கை கடுமையாக விமர்சித்தனர். இதில் மன உளைச்சல் அடைந்த தீபக் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று தனது உறவினர்களிடம் சொல்லி புலம்பியதாக தெரிகிறது. அதோடு அவமானம் தாங்க முடியாமல் வீட்டிலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது அவரின் மனைவி, குழந்தைகள் அனாதையாகியிருக்கிறார்கள்.
பேருந்தில் பயணிக்கும் போது டிரைவர் பிரேக் போடும்போது பேருந்து முன்னும் பின்னும் நகரும். அப்போது தனக்கு பின்னால் நின்றுகொண்டிருப்பவர் மீது ஒருவர் மோதுவது என்பது சகஜம்தான். அதை பெரிதுபடுத்தி பாலியல் சீண்டல் போல சித்தரித்து அந்த பெண் போலியாக வீடியோவை வெளியிட்டு அப்பாவி ஒருவரின் உயிரை பறித்துவிட்டர் என பலரும் இப்போது சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.
அதோடு அந்த பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்கொலை செய்து கொண்ட நபரின் குடும்பத்தினரும் கேரளா டிஜிபியிடம் மனு அளித்திருக்கிறார்கள். இதையடுத்து வீடியோவை பகிர்ந்த பெண் எங்கே என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பெண் தனது சமூகவலைத்தள பக்கத்தை அழித்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் கேரள போலீசார் ஈடுபட்டிருக்கிறார்கள்.