காங்கிரசுக்கு வர வேண்டிய ஒரு ராஜ்யசபா சீட்டு போச்சு.. மொத்தமாக அள்ளியது பாஜக..
மத்தியப் பிரதேச மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, அக்கட்சி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட நீதிமன்றம் முற்றிலுமாக மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், தேர்தல் நடைமுறைகளில் தங்களால் தலையிட முடியாது எனத் திட்டவட்டமாக கூறிவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பை தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநிலத்தில் காலியாக இருந்த மூன்று மாநிலங்களவை இடங்களையும் பாரதிய ஜனதா கட்சி எவ்வித போட்டியுமின்றி முழுமையாக கைப்பற்றியுள்ளது.
இந்த தீர்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படும் வேளையில், பாஜகவுக்கு பெரும் அரசியல் வெற்றியாக பார்க்கப்படுகிறது. வேட்புமனு பரிசீலனையின் போதே காங்கிரஸ் வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றமும் கைவிட்டதால் ம.பி மாநிலங்களவை தேர்தல் களம் பாஜகவின் முழுமையான வசமாகியுள்ளது.
Edited by Siva
