ஐடி வேலை வேண்டாம் என்று உதறிய ஐடிஐ பட்டதாரி.. இயற்கை விவசாயத்தில் லட்சக்கணக்கில் வருமானம்..!
நவீன கல்வியை கற்ற இளைஞர்கள் பலரும் பெருநகரங்களை நோக்கி வேலைக்காக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐடிஐ பட்டதாரி இளைஞர் ஒருவர், வேலையை உதறிவிட்டு தனது கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து சாதித்து காட்டியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் மௌ மாவட்டத்தைச் சேர்ந்த அகிலேஷ் மௌரியா என்ற இளைஞரே இந்த சாதனைக்குரியவர்.
ஐடிஐ படிப்பை முடித்த பிறகு வழக்கமான ஒரு வேலையை தேடிச் செல்லாமல், தனது தந்தையின் உத்வேகத்தால் விவசாயத்தில் ஈடுபட அகிலேஷ் முடிவு செய்தார். தோட்டக்கலை துறையின் ஆலோசனையின் பேரில், தனது ஒரு ஏக்கர் நிலத்தில் சொட்டு நீர்ப் பாசன முறையை பயன்படுத்தி, இயற்கை முறையில் வெள்ளரிக்காய் சாகுபடியை தொடங்கினார். இதற்காக அவர் செய்த முதலீடு வெறும் 30,000 ரூபாய் மட்டுமே.
மே மாதம் முதல் வாரத்தில் அறுவடை தொடங்கிய நிலையில், தினமும் 7 முதல் 8 குவின்டால் வெள்ளரிக்காய் விளைச்சல் கிடைத்துள்ளது. சந்தையில் வெள்ளரிக்காயின் விலை கிலோவுக்கு 20 ரூபாயை தாண்டியதால், அறுவடை தொடங்கிய வெறும் 23 நாட்களிலேயே சுமார் 1.5 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி அகிலேஷ் அசத்தியுள்ளார். படித்த இளைஞர்கள் சரியான திட்டமிடலுடன் விவசாயத் துறையை தேர்ந்தெடுத்தால், கைநிறைய சம்பாதிக்க முடியும் என்பதற்கு அகிலேஷின் இந்த வெற்றி கதையே மிகச்சிறந்த உதாரணமாகும்.
Edited by Siva
