இன்று இரவு வானில் ஒரு அரிய காட்சி.. புளூ மூனை காணத்தவறாதீர்கள்...
இன்று அதாவது மே 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வானில் தோன்றும் புளூ மூன் என்ற விண்வெளி அபூர்வம், விண்மீன் ஆர்வலர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.
சந்திரனின் முழுமையான சுழற்சி காலம் 29.5 நாட்கள் என்பதால், பொதுவாக ஒரு மாதத்தில் ஒரு பௌர்ணமி மட்டுமே வரும். ஆனால், அரிதாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே மாதத்தில் இரு பௌர்ணமிகள் சாத்தியமாகும் போது, அந்த இரண்டாவது முழு நிலவை விஞ்ஞானிகள் நீல நிலா என அழைக்கின்றனர். இம்மாதத்தின் முதல் தேதியன்று முதல் பௌர்ணமி தென்பட்டதால், இன்று இரண்டாவது நிலவு வானில் ஒளிர்கிறது.
நிலா நீல நிறத்தில் மாறும் என்ற பொதுவான கற்பிதத்திற்கு மாறாக, அது தனது இயல்பான முத்து வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்திலேயே ஒளிரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த நிகழ்வின் போது, சந்திரன் பூமிக்கு மிக தொலைவில் இருக்கும் அபோஜி நிலையை எட்டுவதால், இந்த 2026-ஆம் ஆண்டின் மிகச்சிறிய நிலவாக இது கருதப்படுகிறது. இதனால் வழக்கத்தை விட 5.5% சிறியதாகவும், 10.5% பிரகாசம் குறைந்தும் இது காணப்படும்.
இந்தியாவில் உள்ள அனைவரும் எவ்வித சிறப்பு உபகரணங்களும் இன்றி, இன்று மாலை நேரத்தில் தங்களது வெற்றுக்கண்களாலேயே இந்த அழகிய காட்சியை கண்டு ரசிக்கலாம். இதற்கு முன்பு 2018, 2020 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் தோன்றிய இந்த நிகழ்வு, இனி அடுத்து 2028-ஆம் ஆண்டு டிசம்பர் 31 மற்றும் 2029-ல் தான் மீண்டும் நிகழும் என வானியலாளர்கள் கணித்துள்ளனர்.
Edited by Siva
