வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 30 ஜூன் 2016 (11:25 IST)

சல்மான் கானை துரத்தும் மகளிர் ஆணையம் - ஆஜராக மீண்டும் சம்மன்

சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய விவகாரத்தில், மகளிர் ஆணையத்தில் நேரில் ஆஜராகததை அடுத்து, சல்மான் கானுக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
 

 
சல்மான்கான் ‘சுல்தான்’ என்ற இந்திப் படத்தில் மல்யுத்த வீரராக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஒரு இணையதளம் அவரை சமீபத்தில் பேட்டி எடுத்தது. 
 
அப்போது சுல்தான் படத்தில் மல்யுத்த வீரராக நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று செய்தியாளர் கேட்டார்.
 
அதற்கு சல்மான்கான் கூறும்போது “படப்பிடிப்பின் போது, ஒவ்வொரு நாட்களும் சண்டை காட்சிகள் ஆறு மணி நேரம் எடுக்கப்பட்டது. அப்போது 120 கிலோ எடை கொண்ட எதிரியை நான் அலேக்காக தூக்கி கீழே எறிய வேண்டும். அதுவும் பலமுறை, வெவ்வேறு திசைகளில் தூக்கி போட வேண்டும். 
 
படப்பிடிப்பு முடிந்து செல்லும்போது என்னால் நேராக நடக்க கூட முடியாது. ஒரு கற்பழிக்கப்பட்ட பெண் போல் என் உடம்பு ரணமாக இருக்கும். அதன்பின் சாப்பிட்டு விட்டு, மீண்டும் பயிற்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. அதை நிறுத்தவும் முடியாது” என்று கூறியிருந்தார். 
 
அவரின் இந்த கருத்துக்கு பல பெண்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். பாலியல் வல்லுறவுக்கு உள்ளான பெண்களை கேலி செய்யும் விதமாக, சல்மான்கான் கூறியிருப்பதாக சர்ச்சைகள் கிளப்பப்பட்டன.
 
இவ்விவகாரத்தில், சல்மான்கான் 7 நாட்களுக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் கூறியது. மேலும், மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையமோ, சல்மான்கான் ஜூன் 29-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குள், ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பியது.
 
ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதனால், தற்போது ஜூலை 7-ஆம் தேதி ஆஜராகும்படி சல்மான்கானுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.