ஸ்கிரீன்ஷாட்கள், புகைப்படங்கள், பி.டி.எஃப் டிக்கெட் செல்லாது: ரயில்வே துறை அதிரடி அறிவிப்பு..
ரயில்வே நிர்வாகம், ரெயில் ஒன் செயலி மூலம் முன்பதிவு செய்யப்படும் முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் குறித்த புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பயணத்தின் போது ரெயில் ஒன் செயலியில் உள்ள அசல் டிக்கெட்டை மட்டுமே அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள். ஸ்கிரீன்ஷாட்கள், புகைப்படங்கள், பி.டி.எஃப் பிரதிகள் அல்லது வாட்ஸ்அப் மூலம் பகிரப்படும் டிக்கெட்டுகள் செல்லாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்ட அதே மொபைல் போனில் மட்டுமே டிக்கெட்டை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரயில் புறப்படுவதற்கு முன்பாகவே டிஜிட்டல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்; புறப்பட்ட பிறகு செய்யப்படும் முன்பதிவுகள் செல்லாததாக கருதப்படும். பயணத்தின் போது இந்த மொபைலுடன், செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையை வைத்திருப்பதும் கட்டாயமாகும். சமீபத்தில் வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் காட்டிய பயணியிடம் அபராதம் வசூலிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த புதிய விதிமுறைகள் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்காக மற்றவர் டிக்கெட் முன்பதிவு செய்யும் சூழலில், அந்த மொபைல் போனை பயணத்தின் போது கொண்டு செல்வது முதியவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இத்தகைய நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் விதிமுறைகளை எளிதாக்க வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
Edited by Siva
