வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (09:04 IST)

நீண்ட விடுமுறையைத் தொடர்ந்து ராகுல் காந்தி ஆன்மிக பயணத்தைத் தொடங்கினார்

நீண்ட விடுமுறையைத் தொடர்ந்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆன்மிக பயணமாக கேதர்நாத் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.
 
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை துணைத்தலைவரான ராகுல் காந்திக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதற்கு சில மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ராகுல் காந்தி திடீரென மாயமானார். ராகுல் காந்தி ஓய்வு எடுப்பதற்காக விடுமுறையில் சென்று இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
 
இதைத் தொடர்ந்து, தனது 56 நாள் ஓய்வுக்கு பின்னர் கடந்த 16 ஆம் தேதி ராகுல் காந்தி டெல்லி திரும்பினார். அதைத் தொடர்ந்து கடந்த 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் அவர் கலந்து கொண்டார். மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக பேசினார்.
 
இந்தநிலையில் ராகுல்காந்தி நேற்று திடீரென தனது ஆன்மிக பயணத்தை தொடங்கியுள்ளார். சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் 11 ஆவது ஜோதிர்லிங்கம் அமைந்துள்ள கேதர்நாத்திற்கு அவர் நேற்று புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்ற அவர், உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் உள்ள ஜாலிகிராண்ட் விமானநிலையத்தை காலை வந்தடைந்தார்.
 
அவரை மாநில முதலமைச்சர் ஹரிஷ் ராவாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். கடந்த 2013 ஆம் ஆண்டு கேதர்நாத்தில் நடந்த மழை வெள்ளத்தில் கேதர்நாத் கோவில் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. தற்போது அங்கு மேற்கொண்டுள்ள சீரமைப்பு பணிகள் பற்றிய படங்களை ராகுல் காந்தி பார்வையிட்டார்.
 
பின்னர், ஜாலிகிராண்ட் விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கவுரிகாந்திற்கு ராகுல் காந்தி புறப்பட்டார். அவருடன் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பிகாசோனி, மாநிலத் தலைவர் கிஷோர் உபத்யாயா மற்றும் மூத்த தலைவர்கள் சென்றுள்ளனர்.