மக்களவைக்கு வர பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை.. பிரியங்கா காந்தி ஆவேசம்..!
மக்களவையில் பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சி எம்.பி.க்கள் திட்டமிட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா சுமத்திய குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "மூன்று பெண் எம்.பி.க்கள் இருக்கைக்கு முன்பு நின்றதற்கே பிரதமருக்கு அவைக்குள் வர துணிச்சலில்லை" என்று சாடியுள்ளார்.
சபாநாயகர் பின்னால் ஒளிந்துகொண்டு, எதிர்க்கட்சியினர் தாக்க முயல்வதாக பிரதமர் அபத்தமான புகார்களை கூறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அரசுக்கு விருப்பமில்லை என்பதே உண்மை என்றும் பிரியங்கா தெரிவித்தார்.
இதேபோல் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியும் சபாநாயகரின் கருத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "நாங்கள் போராடுவோம், கேள்வி கேட்போம் என்று பயந்து கொண்டுதான் பிரதமர் அவைக்கு வரவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.
தாக்குதல் நடத்தப்போவதாக தனக்குத் தகவல் கிடைத்ததால் தான் பிரதமரை வர வேண்டாம் என அறிவுறுத்தியதாக சபாநாயகர் கூறியது, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva