ஸ்ட்ரெச்சருடன் நடுத்தெருவில் நோயாளியை கொண்டு சென்ற உறவினர்கள்.. மருத்துவமனையின் பாதுகாப்பு கேள்விக்குறி..!
மத்தியப் பிரதேசம், ரேவா நகரில், சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி, மருத்துவமனை ஸ்ட்ரெச்சருடன் நடுத்தெருவில் கொண்டு செல்லப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிருகநயனி சௌராஹா பகுதியில், பரபரப்பான சாலை சந்திப்பில் உறவினர்கள் ஸ்ட்ரெச்சரை தள்ளி சென்ற இந்த 15 வினாடி வீடியோ, அரசு மருத்துவமனையின் பாதுகாப்பு மற்றும் உள் நிர்வாக கட்டுப்பாடு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரு நோயாளி ஸ்ட்ரெச்சருடன் வெளியேறியது எப்படி என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆரம்பத் தகவலின்படி, ஒரு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் யோசனைப்படி, நோயாளியை வேறு இடத்திற்கு மாற்ற முயன்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
காணொளி பரவியதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. துணை முதல்வர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் இந்த அலட்சியம் நிகழ்ந்ததால், இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
விசாரணைக்கு பிறகு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
Edited by Mahendran