ஓடும் ரயிலில் திடீர் தீ விபத்து.. பயணிகளுக்கு என்ன ஆச்சு? பரபரப்பு தகவல்..!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியிலிருந்து ஜெய்சால்மர் நோக்கி வந்து கொண்டிருந்த ஸ்வர்ன் நகரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டிக்கு அடியில் இன்று திடீரென தீப்பிடித்தது. பெட்டியின் அடியிலிருந்து புகை மற்றும் தீ கிளம்புவதை அறிந்த லோகோ பைலட், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக ரயிலை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தினார்.
ரயில் நின்ற அடுத்த சில நிமிடங்களில், ரயில்வே ஊழியர்கள் தீயணைப்பு கருவிகளை கொண்டு தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஊழியர்களின் துரித நடவடிக்கையால் தீ மற்ற பெட்டிகளுக்கு பரவாமல் விரைவாக கட்டுப்படுத்தப்பட்டது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ அணைக்கப்பட்டு பாதுகாப்பு சோதனைகள் முடிந்த பிறகு, ரயில் மீண்டும் தனது பயணத்தை தொடர்ந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநரின் சமயோசித புத்தியால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
Edited by Siva