1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 27 ஏப்ரல் 2015 (11:24 IST)

பத்மநாபசுவாமி கோவில் குளத்தில் பைப் வெடிகுண்டுகள்: காவல்துறையினர் விசாரணை

திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாபசுவாமி கோவில் குளத்தில் பைப் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது, இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாபசுவாமி கோவில் ரகசிய அறைகளில் அரிய வகை பொற்குவியல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலக பிரசித்திப்பெற்ற தலங்களுள் ஒன்றாக இந்தக் கோவில் கருதப்பட்டு வருகிறது.
 
இந்தத் கோவிலில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 
 
கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் பத்மதீர்த்த குளமும், வடக்கு வாசல் பகுதியில் ஸ்ரீபாதகுளமும் அமைந்துள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவின்கீழ் இந்த குளங்கள் தூர்வாரப்பட்டு சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
 
இதன்படி, ஸ்ரீபாதகுளத்தில்தூர்வாரும் பணிகள் நடை பெற்று வந்தபோது, ஒரு சாக்கு மூட்டை கட்டப்பட்ட நிலையில் மண்ணில் புதைந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோவில் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் அந்த சாக்கு மூட்டையை காவல்துறையினர் திறந்து பார்த்தபோது, அதில் ஐந்து "பைப்" வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது.
 
அந்த "பைப்’"வெடிகுண்டுகளை அதிகாரிகள் கைப்பற்றி தீவிர ஆய்வு நடத்த பரிசோதனை கூடத்திற்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இது குறித்து காவல்துறை ஆணையர் கூறியதாவது:- 
 
பத்மநாபசுவாமி கோவில் அருகே குளத்தில் கைப்பற்றப்பட்ட "பைப்"  வெடிகுண்டுகள் சுமார் 2 ஆண்டு காலம் பழமை வாய்ந்தவை. தற்போது அதன் வீரியத்தன்மை குறைந்திருக்கலாம். அதில் ஒரு குண்டு வெடித்த நிலையில் கருகியிருந்தது.
 
அந்த வெடிகுண்டுகள் பற்றி தீவிர ஆய்வு நடத்திய பின்னரே முழு விவரம் தெரிய வரும். இந்த வெடிகுண்டுகளை சாக்கு மூட்டையில் கட்டி கோவில் குளத்தில் போட்டது யார்? என விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.